Monday, 25 February 2019

தாமரை - NELUMBO NUCIFERA

தாமரை 
NELUMBO NUCIFERA 

தாமரை என்ற பெயரை கேட்டதும் நம் நினைவுக்கு வருவது லட்சுமி தேவி, தேசிய மலர், கிடைப்பதற்கு சற்று அறிய  மலர், COSTLY ஆன மலர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் கொஞ்சம் அறியாத விஷயங்களையும், தாமரையின் வானளாவிய புகழையும் பார்க்கலாமா. இந்தியா முதல் எகிப்து வரை இதன் புகழ் நைல் நதி போன்று நீண்டும், கங்கை போன்று புனிதமாகவும் இருக்கிறது. அதனால் தான் என்னவோ இது பிரம்மா, சரஸ்வதி, லட்சுமி போன்ற கடவுள்களை தாங்கியும் சிவபெருமான் அம்பாள் போன்றோரின் கூந்தலையும் அலங்கரிக்கிறது.     


தாமரை இனத்தில் பலவகை உண்டு 
இதில் அல்லியையும் இங்கு நான் சேர்த்துக்கொள்கிறேன் 

செந்தாமரை - ஸ்ரீ லட்சுமி தேவி 
வெண்தாமரை - ஞானவல்லி சரஸ்வதி தேவி 

நீலோற்பலம் (நீலஅல்லி) (EGYPTIAN BLUE LILLY) -
ஸ்ரீ நீலோற்பலாம்பாள் (திருவாரூர் தியாகராஜர் மனைவி ) 

செவ்வல்லி (ரத்த நிற சிகப்பு பூ) - கேது பகவானுக்கு உகந்தது 
வெள்ளை அல்லி  - சந்திர பகவானுக்கு உகந்தது 

மஞ்சள் அல்லி இனம் ( NEPHUR LUTEUM )


                                                                     செவ்வல்லி 
                                                                   செவ்வல்லி 

என் சிற்றறிவுக்கு எட்டிய வரை தாமரை இனத்தை குறிப்பிட்டுள்ளேன். 

இனி வைத்திய பெரியவர்களின் கட்டுரைகளில் இருந்தும், அனுபவ வாயிலாகவும், சித்த வைத்திய சாத்திரங்களில் இருந்தும், இலக்கியங்களில் இருந்தும் தாமரை மலர்வதை பார்க்கலாம்   

       

முதலில் மூலிகை மன்னர் கண்ணப்பரின் சேகரிப்பு 

தமிழரின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது தாமரை. சமயம், தத்துவம், காதல் போன்ற பல்வேறு துறைகளில் தாமரையை உவமை கூறாத கவிஞர்களே இருக்க மாட்டார்கள். மலர்களிலேயே மிகவும் சிறப்புடையது தாமரை.      

" பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை " - தேவாரம் 

என்று அக்காலம் முதல்,

"தண்ணீரிலே தாமரை பூ தள்ளாடுதே அலைகளிலே"  என்று இக்கால கவிஞர் வரை தாமரை உவமை ஆகிறது. சமயவாதிகள் தாமரை மலரிலே லட்சுமி உறைகிறாள் என்று தாமரையை லட்சுமி வழிபாடுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். ஹோமங்களுக்கும் தாமரை பயன்படுத்தப் படுகிறது. சூரிய வழிபாட்டிலும் தாமரை பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு பல்வேறாக தாமரை தூய்மையான மலராக கொண்டாடப்படுகிறது. 

"நீரிடை உறங்கும் சங்கு நிழலிடை உறங்கும் மேதி 
தாரிடை உறங்கும் வந்து தாமரை உறங்கும் செய்யாள்    

என்று கம்பரும் தாமரை மலரில் லட்சுமி வாழ்கின்றாள் என்று குறிப்பிடுகின்றனர். 



நம் நாட்டின் தேசிய சின்னமாகத் தாமரை மலர் போற்றப்படுகின்றது. தத்துவ வாதிகள் மனித வாழ்வைத் தாமரையுடன் ஒப்பிடுவார்கள், "தாமரை இலைமேற் தண்ணீர் போலே" உலகில் ஒட்டியும் ஒட்டாமலும் வாழவேண்டும் என்பது அவர்கள் கூறும் வாழ்வியல் விளக்கம்.  

தாமரை தமிழகத்தில் எங்கும் சாதாரணமாக காணப்படும் நீர்வாழ் கொடியினம். காலையில் கதிரவனின் பொற் கிரணங்கள் தாமரை மொட்டினை அரவணைக்கும் போது, தாமரை மலரும். ஒவ்வொரு ஊரிலும் தாமரை குளங்கள் அக்காலத்தில் அமைக்கப்பட்டன. தாமரை இல்லாத பொய்கைகள் மக்களால் ஒதுக்கப்பட்டன என்பதை விவேக சிந்தாமணி பாடல் ஒன்று கீழ்க்கண்டவாறு கூறுகிறது,

"சந்திரன் இல்லா வானம் 
தாமரை இல்லாப் பொய்கை 
.............................................................
தனமில்லா மங்கை போலாம்"      

மலர்களிலேயே அரசி தாமரை என்று எகிப்திய நாட்டறிஞர் இம் மலரைப் போற்றுகின்றார்.
   

நீரிலும், சேற்றிலும் தாமரை வளரும். "சேற்றிலே மலர்ந்த செந்தாமரை" என்று நாட்டில் கூறுவர். குளங்களிலும், ஓடைகளிலும், ஆறுகளின் மருங்குகளிலும், சதுப்புகளிலும் தாமரைக் கொடி வளரும். அதிக ஆழமில்லாத நீருக்கு அடியிலே, சேற்றிலே வேரூன்றி, ஊர்ந்து படரும் கொடியினம். தண்டிலே கிழங்கு வளரும். பலமான தண்டாகவும்,  பருமனான தண்டாகவும் காட்சியளிக்கும். கிழங்கு மற்றவைபோல் மாவுச் சத்துடையது. தண்டிலிருந்து மிகப் பெரிய இலைகள் வளரும். இலையின் காம்பு நீளமாகிக் கொடி போல ஓடும். காம்பிலே முள் போன்ற அமைப்புகள் இருப்பதால் "முளரி" என்ற பெயரும் தாமரைக்குண்டு. இலை பெரும்பாலும் வட்ட வடிவமுடையதாக இருக்கும். இலையைப் பறித்து கைகளில் வைத்துக் கொண்டால், வீரன் கையில் கேடயம் இருப்பதுபோல் தோன்றும். நீருக்கு மேல் 1 அடி முதல் 2 அடி வரை உயரமாக நிற்கும். பாதரசத்தை தரையில் விட்டால் மணிபோல் உருளும். அதுபோல் தாமரை இலை மேல் தண்ணீர் விட்டால் முத்து மணிபோல் அவை உருளும். இலையின் மேல் உள்ள பசையுள்ள திரவமே இதற்குக் காரணம். 
   
தாமரை இருவகையாக காணப்படுகிறது. வெண்தாமரை, செந்தாமரை என அவற்றை அழைப்பர்.   

"வெள்ளைத் தாமரை பூவினிலிருப்பாள் 
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்"
            
என்ற பாடல், வெண்தாமரை கலைமகளின் இருப்பிடம் ஆகவும், செந்தாமரையில் திருமகள் வாழ்வாள் என்று வழக்கம் இருக்கிறது. இவையன்றி நீலத்தாமரை, மஞ்சள் தாமரை பூக்களும். ஓரிதழ் தாமரை, ஓரிலை தாமரை, ஆகாய தாமரை என பெயர்களில் பல மூலிகை இனங்களும் உண்டு.         
        


மருத்துவ பயன் 

தாமரையின் இலை, தண்டு, பூ, விதை ஆகியன அனைத்தும் மருத்துவத்தில் மிகுந்த பயன் தருவதாகக் கருதப்படுகிறது. இதன் சுவை துவர்ப்பும், இனிப்பும் உடையதாகும். உடலுக்கு குளிர்ச்சியை தரும். நெஞ்சில் சேரும் கோழையை அகற்றும். உடல் தாதுக்களில் காணப்படும் வெப்பத்தைத் தணிக்கும். உள்ளுறுப்புக்களில் தோன்றும் அழற்சியைப் போக்கும். உடலுக்கு டானிக் போன்று போஷாக்கை அளிக்கும்.       

வெண்தாமரை பூ இருதயத்திற்கும், மூளைக்கும் மிக நல்ல மருந்தாகும். செந்தாமரை பூ மூலச் சூட்டைத் தணிக்கும். தாமரை மலரில் உள்ள தேன் செந்தூரங்களுக்கு (சித்த மருத்துவத்தில் பெரிய மருந்துகள்) மிகச் சிறந்த அனுபானமாகும். தாமரை தேன் அருந்திவர உடல் அழகு பெரும். கண் நோய்கள் வராது. வெண்தாமரை மலருடன் பசும் பால் சேர்த்து சாப்பிட்டு வர உடல் கல்பமாகும். கண்களில் காணும் எரிச்சல், காய்ச்சல், தாகம் ஆகியவற்றை தாமரை மலர் சேர்ந்த குடிநீர் போக்கும்.

(சித்த வைத்தியர்கள் தாமரையை தைலமாகவும், லேகியமாகவும், சூரணமாகவும் (POWDER), கிருதமாகவும், குடிநீராகவும் மருந்துகளில் பயன்படுத்தினர் )                  


ஈரல் நோய்க்கு 

சாராயம், மது மற்றும் தீவிரமான மருந்துகளை சாப்பிட்டு ஈரல் பாதிக்கப்பட்டவர்கள் வெண்தாமரை பூவை குடிநீர் செய்து சாப்பிட்டு வர ஈரலில் தங்கும் வெப்பம் அகன்று உட்சூடும் குறைந்து ஈரல் பலப்படும்.  
பூவின் சாற்றை காலையில் 1 அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால் இதய பலவீனம், ஈரல் கோளாறு, அசீரணத்தால் வரும் பேதி ஆகியன குணப்படும். பூவின் கஷாயம், பித்தத்தால் வரும் காய்ச்சலைக் கண்டிக்கும். 

தாமரைப் பூவை, தேன், பன்னீர், சர்க்கரை ஆகியவற்றுடன் சேர்த்து மணப்பாகு செய்து தினம் 2 வேளை இரண்டு டீஸ்பூன் சாப்பிட்டு வர இருமல், ரத்தப்போக்கு, சீதபேதி ஆகியன குணமாகும். ரத்த மூலம் உள்ளவர்கள் 20 நாட்கள் மாமிசம், புளி, காரம் நீக்கி தொடர்ந்து இந்த மணப்பாகுவைச் சாப்பிட்டுவர ரத்தமூலம் குணமாகும்.          

அடிக்கடி வலிப்பு நோய் காணும் குழந்தைகட்கு தாமரைப் பூ கியாழம் சங்களவு கொடுத்துவர குணமாகும்.


"மகா ஏலாதி மாத்திரை" என்ற சித்த மருத்துவ மருந்தில் தாமரை மலரின் மகரந்தமும், தாமரை வளையம் ஆகியன சிறப்பான இடம் பெறுகிறது. தாமரை மலர் சேர்ந்த லேகியம், சூரணம் ஆகியன காச நோயையும், மார்ச்சளியையும் குணமாக்கும்.      

தாமரை விதை 

தாமரை வித்தினைப் பொடித்து தேன் கலந்து சாப்பிட உடலுக்கு கல்பமாகும் (சுத்தி செய்து). நீண்ட நாள் வாழலாம் என்பர் சித்தர்கள். வாய் ருசியின்மை, அயற்சி ஆகியன தாமரை வித்தால் போகும். 

மேக நோயால் பாதிக்கப்பட்டு, உடல் நலிந்தவர்கள் தாமரை வித்தைப் பயன்படுத்தி பலன் பெறலாம். இதன் விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவி வர வாந்தி நிற்கும்.        




கிழங்கு 

தாமரை பூவிற்கு அடுத்தபடி தாமரை கிழங்கு மிகுந்த பயன் அளிக்கிறது. கண்களுக்கு ஒளி, தோலில் வரும் தவளைச் சொறி, வயிற்றுக்கடுப்பு ஆகியன நீங்கும்.    


மேகப் புண்கள் ஆறிட  (SYPHILIS DISEASES) 

பல்வேறு பெண்டிரைச் சேர்ந்ததன் பலனே பரிசே மேக நோய்கள். இந்நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் இன்றும் சரியான மருந்துகள் இல்லை. (வெள்ளை படுதல் அதிகமாகி மேகநோய் உண்டாகும்). இந்நோயில் புண்கள் வந்து விட்டால் (இதன் கொடூரத்தை இங்கு விளக்க விரும்ப வில்லை அதனால் இந்நோய் பற்றி அறிய நினைப்பவர் SYPHILIS என்று GOOGLE-ல் TYPE செய்து IMAGE-ல்  CHECK செய்து கொள்ளவும்), உடல் மிகவும் துன்புறும். இம் மேக புண்கள் தீர

தாமரைக் கிழங்கு   100 கிராம்    
பரங்கிச் சக்கை           30 கிராம் 
காசிக்கட்டி                    15 கிராம் 

இவற்றைத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினம் 1 வேளை 1 டீஸ்பூன் எடுத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்துவர புண்கள் ஆறும். (உடல் சூட்டினாலும், பலமின்மையாலும் இந்நோய் காணலாம் சித்த மருத்துவத்தில் இதெற்கென பல நூறு மருந்துகள் உள்ளன - கூழ்பாண்ட கிருதம், கூழ்பாண்ட லேகியம், சதாவேரி கிருதம், சதாவேரி லேகியம், கதலி லேகியம், குங்கிலிய பஸ்பம், வெள்ளி பஸ்பம்.........ETC

தாமரைக் கிழங்கு பல்வேறு தைலங்களில் சேர்க்கப்படுகிறது. தாமரை கிழங்கு சேர்ந்த தைலம் கண்களுக்கு குளிர்ச்சியையும் மண்டை வறட்சியையும் போக்கும்.  


  தாமரை வளையம் என்று கூறப்படும் தாமரை தண்டு பல சித்த வைத்திய மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது (ANTI VENOM)

தாமரை இலை சங்கு பஸ்பத்தை செய்வதற்க்குப் பெரிதும் சித்த மருத்துவர்களுக்கு உதவுகிறது. 
வள்ளல் பெருமான் தாமரையின் மருத்துவப் பயனைக் கீழ்க்கண்ட பாடலில் நன்கு கூறுகின்றார்.  

"பொற்பங் கயத்தின் புதுநறவுஞ் சுத்த சலமும் புகழ்கின்ற 
வெற்பற் தாமர மதிமதுவும் இளங்கும் பசுவின் தீம்பாலும் 
நற்பஞ் சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவை தீர்க்குங்
கற்பங் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே"

தாமரை பூ கண்களுக்கு குளிர்ச்சியையும், தாமரை வளையம் நஞ்சுகளை முறிக்கவும், தாமரையின் இதழ்கள் உடல் வசீகரத்தையும், தாமரையின் தாது மேகப் பிணிகளைப் போக்கவும், தாமரை கிழக்கு ஆண்மை சக்தி பெருக்கிற்கும் பயன்படும் என்று போற்றுகின்றார். 

தாமரை மலர் நிறைந்தது மருத நிலம். இந்நிலத்தில் வாழ்பவர்களுக்கு தாமரை மலர் தரும் தடுப்புச் சக்தியால் வாத, பித்த, கபப் பிணிகள் வாராது என்று சித்த மருத்துவ நூல் கூறுகிறது. 

"மருதநிலம் நன்னீர் வளம் ஒன்றைக் கொண்டே 
பொறதனில் மாறியநோய் போக்கும் கருத நிலத் 
தாறிரதஞ் சூழ அருந்தவரென்றார் பிணியெல்
லேறிரதஞ் கற்புவிக்கு மில்"       
   
  

புராணம் தரும் சான்று 

கௌதம முனிவரின் மனைவி மீது மோகம் கொண்டு அடாது செய்த தேவ லோகத்து இந்திரனுக்கு கிடைத்த தண்டனை அனைவருக்கும் தெரியும். அந்த தண்டனையிலிருந்து இந்திரன் விடுதலை பெற உதவியது தாமரை மலர் தான் என்று  புராணங்கள் கூறுகின்றன. அதுபோல் பூலோகத்து இந்திரர்கள் தவறாக சேர்ந்து பெற்ற மேகப் பிணிகளுக்கு தாமரை கிழங்கு, தாமரை மலரை நாடினால் மேகப் பிணிகள் விலகும் என்பதில் ஐயமில்லை.   


அரவிந்தம், சூரிய நட்பு, கேகயம், புண்டரீகம், பதுமம், முளரி, முண்டகம், பங்கயம் எனப் பல்வேறு பெயர்களால் சமயம், தத்துவம், கவிதை போன்ற துறைகளில் உள்ளவர்களால் போற்றப்படும் தாமரை சித்த மருத்துவர்களால் அதன் மருத்துவப் பயன் கருதி போற்றப்படுகின்றது. 
     

"ஈரலைப் பற்றிமிக ஏறுகின்ற வெப்பமும் போய் 
கோர மருந்தின் கொடுமையிலும் பாருலகில் 
தண்டா மணத்தையுள்ள தாழ்குழலே காந்தல் விடும் 
வெண்டாமரைப் பூவால் விள்"




---------------------இதுவரை பார்த்தது மூலிகை மணி கண்ணப்பர் கட்டுரை 


அறிய விவரம் 

காமன் எய்யும் ஐந்து மலர்க்கணைகளில் தாமரையும், நீலத்தாமரையும் (நீலோற்பலம்) ஒன்று 




மன்மதன் கணைகளில் பயன்படுத்தும் ஐந்து மலர்கள் 

தாமரை இனத்தில் நீலத்தாமரை என்பது நீலஅல்லி இனத்தை சேர்ந்தது எனவும் இதன் பெயர் நீலோற்பலம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இது எகிப்தியர்கள் பயன்படுத்திய காயகல்பம். நைல் நதியில் இது அதிகமாக கிடைக்கிறது. மேக நோய் மற்றும் மேக சூட்டை தணித்து தாதுவிருத்தி செய்யும் குணம் உள்ளது (EGYPTIAN BLUE LILLY).   



நீலோற்பலம் திருவாரூர் தியாகராஜ பெருமான் துணைவி பாலாம்பிகையை பூஜிக்க பயன்படுத்தப்பட்டது அதனால் அம்பாள் இங்கு நீலோத்பலாம்பாள் என்று அடியவர்களால் அழைக்கப்படுகிறாள். மூலிகைகளிலும், கல்பங்களிலும் இல்லற வாழ்விற்கு உரியன, துறவற வாழ்க்கைக்கு உரியன என இருவகைப்படும். அதில் இந்த நீலநிற தாமரை இல்லறவாழ்க்கைக்கு உரிய முதன்மை மூலிகையாக சாத்திரத்தில்  கருதப்படுகிறது.   




அழகு, தேஜஸ், வசீகரம், உடல்பலம், தீர்க்காயுள் போன்ற குணங்களை உடலுக்கு தரும் நீலோற்பலம். அதனால் தான் இதை எகிப்தியர்கள் தங்கள் மருந்துகளிலும் உணவுகளிலும் சேர்த்துள்ளனர். 

நீலோற்பலம் NYMPHAEA STELLATA 
"கண்ணுங் குளிரு மக்கி காணாது காந்து பித்த 
மெண்ணுந் தோஷம் மேக மேகும்காண் பெண்ணே 
வயிற்றுக் கடுப்பிரத்த மாறு நெய்தலுக்குப் 
பயித்தியம் போம் விந்தூறும் பார் "



உலக நிரந்தர அழகி என அனைவராலும் புகழப்படும் கிளியோபாட்ராவின் (CLEOPATRA) அழகை பராமரிக்க எகிப்தில் அவளுக்கு ஒரு மருத்துவ குழுவே இருந்துள்ளது. அவர்கள் ஒருமுறை அவளுக்கு கொடுக்கும் கல்ப மருந்து தயாரிக்க மூலிகைக்காக இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஊதியூர் மலைக்கு வந்ததாக செவிவழி செய்தி உண்டு அவர்கள் வரலாற்றில் இந்த செய்தி உள்ளதாம். 







எகிப்தியர்கள் வாழ்வில் தாமரை இன்றியமையாததாக இருந்துள்ளது. எகிப்தியர்கள் வைத்தியம் பற்றி 1928 ஆம் வருடம் வெளிவந்த வைத்திய ஆராய்ச்சி புத்தகங்களில் இருந்து 

   


    
மாந்திரீகத்தில் அஷ்ட கர்ம வித்தைகள் உண்டு, அதில் தம்பனம் என்ற வித்தை பழக அதில் வெற்றி அடைய தாமரை மணிகள் (தாமரை விதை) ஜெப மணிகளாக ஆதிகாலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டன. இது வேத சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது (அதர்வண வேதம்)



இன்னும் தாமரையை பற்றி எழுதினால் காலநேரம் போதாது. இலக்கியங்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்கணக்கு ஆகிய நூல்களில் தாமரை, நூற்றிதழ் தாமரை என புகழும்,அறிய விஷயங்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இலக்கியம் ஒரு பூக்காடு என்ற நூலை பார்த்தால் தாமரை பற்றி இன்னும் விஷயங்கள் அறியலாம் எனவே இங்கு இலக்கியங்களில் (காதல், மங்கை, மென்மை, மனம், காமம், சைவம், சிவம் சக்தி) உள்ள தாமரை பற்றி எழுதுவதை தவிர்க்கிறேன்.



தாமரை சிவ அர்ச்சனைக்கும் சக்தி வழிபாட்டுக்கும் ஆதியிலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பல உதாரணங்கள் ஆன்மீக, வேத நூல்களில் காணப்படுகின்றன.


 



இறுதியாக தாமரை பற்றி வைத்திய ரத்தினம் என புகழப்பட்ட நீதிபதி வி.பலராமய்யா கட்டுரையை பார்ப்போம்.

  






இந்த அழகனின் பாதங்கள் கூட தாமரைதான் 

"சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பந் 
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர் 
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும் அருட் 
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும் என் கண்ணுற்றதே"



நூற்றிதழ் தாமரை போன்று இங்கு செய்திகள் தொடர்ந்து விரியும் 

நன்றி வணக்கம் 


Monday, 18 February 2019

தும்பை பெண் (Leucas Aspera)

தும்பை பெண் 
Leucas Aspera



தும்பை செடியைப் பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. நம் வீட்டு தோட்டங்களில், வெளிப்புற பகுதிகளில், கோவிலில் சிவபூஜைகளில், மருந்தாகவும் கண்டிருப்போம் கேட்டிருப்போம் படித்திருப்போம். இன்னும் கொஞ்சம் படிப்போமா ...........

தும்பையை பற்றி அறிய அவ்வளவு விஷயங்கள் உள்ளதா என கேட்டால். ஆமாம், பின் இருக்காதா ஒளவையார், சிவகலை, காரைக்கால் அம்மையார் என சிவபதம் அடைந்த சிவ பக்தைகளில் தும்பையும் முக்கியமானவர். ஆம் தும்பை என்ற செடியினம் ஒரு பெண். பொதுவாக சித்த வைத்தியங்களில் தும்பை விஷவைத்தியத்திற்காக பயன்படுத்தப் படுகிறது. இதன் விவரம் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக காண்போம். இதன் முழு விவரமும் இங்கு குறிப்பிடப்படுவது மூலிகை மன்னர் கண்ணப்பர் அனுபவமுறைகளும், பலராமய்யாவின் முறைகளும் முழுவதுமாய் கொடுத்துள்ளேன்.                




மூலிகை மணி கண்ணப்பரின் கட்டுரை 

தும்பைச் செடியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது, தும்பையும் ஆபத்துக் காலத்தில் உதவக்கூடிய மூலிகையே. ஏறக்குறைய ஒருஅடி வரை வளரக்கூடிய தும்பை நம் நாடெங்கும் காணக்கூடியது. இதன் மலர் ஒரே இதழை உடையது சுத்தமான வெண்மை நிறப்பூ. இந்த மலர் கால்களின் பாதங்கள் கீழ்நோக்கி இருப்பதுபோல காட்சி அளிப்பதால் "பாதமலர்" என்று சிலர் கூறுவார்கள்.



இதன் சமூலம் ( இலை, பூ, தண்டு, வேர் ) யாவும் பொதுவாக மலத்தை இளக்கி நீராக்கி வெளித்தள்ளும் குணமுடையது. அத்துடன் வாந்தியையும் உண்டாக்கும். சகல வித ஜந்துக்களின் விஷங்களையும் முறித்துவிடும் தன்மை வாய்ந்தது. கோழை என்ற கபங்களையும், விஷபூரிதமான நீர்கள் உடலைப்பற்றியதும் வெளியேற்றிவிடும். உடலுக்கு உஷ்ணத்தையும் கண்களுக்கு ஒளியையும் சிரரோகம் நேத்திர (கண்) ரோகங்களிலும் சிறப்பாக வேலைசெய்யும். மாதர்களின் உத்திரச்சிக்கலை சரிசெய்து கிரமமாக்கும்.      



இலை : தும்பை இலையில் நீங்காத விஷப்பூச்சிகடிகள், பாம்பு கடிவிசங்கள் இல்லை எனலாம். நாகபாம்பு முதல் எந்த பாம்பின் விஷமானாலும் முறிந்துவிடும். விபரம் : தும்பை இலையை மட்டும் சேகரித்து இடித்து சாறுபிழிந்து 1 அவுன்ஸ் வரை பாம்பு கடித்தவர்கள் குடிக்க வேண்டும் சிறிது நேரத்திற்கெல்லாம் வயிற்றை கலக்கி இரண்டு மூன்று தரம் பேதியாகும், வாந்தியும் கபத்துடன் சேர்ந்து வெளிவரும். பாம்பு கடியால் குளிர்ந்த உடல் மீண்டும் உஷ்ணம் ஆகும். இதுவே குணமாவதன் அறிகுறி, பாம்பு கடித்தவரை சுமார் 20 மணி நேரம் வரை உறங்க வைத்தல் கூடாது. மேலும் இரண்டு நாளைக்கு புதிய பானையில் பச்சரிசியும் பாசிப்பயறும் கலந்து பொங்கி அதைத்தான் ஆகாரமாக கொடுக்க வேண்டும். உப்பு, புளி, காரம் ஆகியவற்றை மூன்றாம் நாள் கொடுக்கலாம். (மருத்துவ வசதி இல்லா காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தியது )  பாம்பு கடித்தவர் மயங்கி விழுந்து வாயில் நுரை தள்ளி விட்டால் கவலை வேண்டாம். தும்பை சாற்றை மூக்கின் வழியாக சிறிது ஊற்றி வாயால் ஊதினால் சிறிது நேரத்தில் மயக்கம் தெளியும். உடனே தும்பை இலைச்சாற்றை 1 அவுன்ஸ் உள்ளே கொடுத்து மேற்கண்ட சிகிச்சையை ஆரம்பித்து கடிவாயிலும் தும்பை இலையை அறைத்து கட்டிவிட வேண்டும். மூக்கில் விட்டு ஊதியும் மயக்கம் தெளியவில்லை என்றால் அது ஆத்மீக மரணம் என்பதை நிச்சயமாக சொல்லலாம்.  பாம்பு கடிப்பதில் இரண்டு விதம் உண்டு 1.ஆதிஆத்மீகம் 2.அகஸ்மாத்தம் என்பதாகும். முதலாவது குறித்த நேரத்தில் எந்த விதத்திலும் எங்கு இருந்த போதிலும் வந்து கடிக்கும் இது தவிர்க்க முடியாதது. பூர்வ ஜென்ம வினையால் மூள்வது. இரு ஆத்மாக்களின் முந்திய பிறவியின் செயலால் நிகழும் ஆதிஆத்மீக அரவம் தீண்டுவது சிகிச்சை பலன் அளிக்காது.  அகஸ்மாத்தம் என்பது எதிர்பாராத விதமாக பாம்புகள் வசிக்கும் இடங்களுக்கு போவதாலும், அதை துன்புறுத்தலாலும், அதன் மேல் நம் உடல் படுவதாலும், இடி மழை மின்னல் அதிர்ச்சி பசி இவைகளால் மிரண்டுபோய் இடம் பெயர்ந்த நாகங்கள் எதிர்ப்படும் மனிதர், மிருகங்களைத் தீண்டும், இம்மாதிரியான விசக் கடிகளுக்கும் தும்பையின் சிகிச்சை மிக்க பயனுள்ளது. பிழைக்கவும் வழியுண்டு.               
( பின் குறிப்பு : இந்த முதலுதவி செய்கையில் பாம்பு கடித்தவன் கண்ணில் சிறுபீளை சாற்றை 2 துளிகள் விட்டுவிட வேண்டும் இதனால் பாம்பு விஷம் கட்டுப்பட்டு முறிவடையும் )


சிலர் தேள் கொட்டினால் கூட ஊசி போட்டுக் கொள்கிறார்கள் இப்படி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு பிராணன் போயிருக்கிறது. தேள் கொட்டிய ஒரு நண்பருக்கு ஊசி போட்டதன் பலன் ஒரு காலையே எடுத்து விட்டார்கள். தேள் கொட்டி குடைச்சல் வலி தாளாமல் துடிப்பவர்கள் தும்பை இலைச்சாற்றை 4 துளி, சிறிது தேன் கலந்து உள்ளுக்கு கொடுத்து கொட்டின இடத்தில் தும்பைச்சாற்றை தேய்த்துவிட வலி குறைந்து விஷம் முறிந்துவிடும். இவ்வாரே சகல விஷப்பூச்சி கடிகளுக்கும் செய்யலாம்.      



உடம்பின் மேற்காணும் சொறி, சிறங்கு, நமைச்சல் ஆகியவைகளுக்கும் குப்பைமேனி இலையை போலவே தும்பையை அரைத்து உடம்பில் தடவி குளித்துவர குணமாகிவிடும். கீழாநெல்லியின் நண்பன் தும்பை ஆகவே இந்த இரண்டு இலையுடன் கரிசலாங்கண்ணியும் சமமாக சேர்த்து மை போல் அரைத்து கீழாநெல்லி கட்டுரையில் (தொடரும் பதிவில் கீழாநெல்லியும் விரைவில் இடம்பெறும்) குறிப்பிட்டது போல அளவு முறைப்படி அனுசரிக்க காமாலை, பித்த பாண்டு (உடல் கருமை அடைதல்), ரத்த சோகை யாவும் நீங்கும். சீதளத்தால் வரும் மண்டையிடி, தலைவலி, பீனிசம் (குளிர்ச்சியால் தலை புருவம் வலித்தல் மூக்கில் நீர் ஒழுகல்), தொண்டை கபம் நீங்கும். 

     


மாதர்களுக்கு வாய்வு, வாத சம்பந்தத்தால் தலைமுழுக்கு தடைபட்டு தாமதம் ஆகும் போது, தும்பை இலை உத்தாமணி இலை சமமாக எடுத்தரைத்து காலை மாலை 1 அல்லது 2 சுண்டைக்காய் அளவு பசும்பாலுடன் சாப்பிட்டு புளி, அதிக காரம் நீக்கி பத்தியமாய் இருக்க மாதர் உதிரச் சிக்கல் உடைந்து மாதவிடாய் சரியாகும். 






  தும்பையை அகத்தியர் "சீறுகின்ற பாம்போடு சில்விஷங்கள் சென்னிவலி ஏறுகபம் மாந்தர்களே இருக்குமோ குளிர் சீதம் சன்னி விடும் தும்பை இலையால் " என்று புகழ்ந்து கூறுகிறார். 

பூ : தும்பையின் மலர் சுத்த வெண்மை நிறமானது. பச்சை கம்மல் போன்ற கதிர்களில் பூத்து கண்டவர்களின் மனதை கொள்ளை கொள்ளும். நம் நாட்டில் சனிக்கிழமை நீராடும் போது தும்பை மலர் எடுத்து நல்லெண்ணய் உடன் போட்டு காய்ச்சி முழுகும் வழக்கம் உண்டு. இதனால் சலதோஷம் தலைபாரம், தலையில் நீர் ஏறி கனத்து போதல். சிரரோகம் சம்பந்தப்பட்ட நோய்கள் யாவும் தீரும். கண்களுக்கு நல்ல ஒளியும் தரும்.  தும்பை பூவின் சாறு 4 துளி, உத்தாமணி சாறு 2 துளி, மிளகு தூள் 2 சிட்டிகையில் கலந்து சிறிது தேன் கூட்டி குழந்தைகளுக்கு காணும் வயிற்று கோளாறுகள் மாந்தம் பேதி ஆகியவற்றிற்கு கொடுக்க தீரும். தும்பைப்பூ சிறிதளவு ஒரு குவளை (டம்ளர்) ஜலத்தில் போட்டு காய்ச்சி 1/2 குவளையாக்கி அதில் ஒரு டீஸ்பூன் தேனும் விட்டு தினம் மூன்று வேளை கொடுத்துவர கண்நோய்கள், தாகம், சீதள சுரங்கள் குணமாகும். டைபாய்டு என்ற சன்னிபாத சுரம் காணும்போது கண்விழி நோவு, தலைவலி முதலியவற்றை நீங்க தும்பை பூவை 20 எடுத்து முலைப்பாலில் ஊரவைத்து ஒரு மெல்லிய துணியில் நனைத்து நெற்றியில், கன்னப்பொட்டில் போட்டு வர, கண்ணில் 2 துளி விட்டும் வருவதால் தலைபாரம் நீங்கி நோய் சாந்தமாகும். 


   

       
தும்பை மலர் சிவார்ச்சனைக்கு உரிய முக்கியமான மலராகும். "ஆற்றை இதழி தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே" என்று அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் கூறுகிறது.  



       
புராணங்களில் மூலிகைகள் பின்னிக் கிடக்கின்றன, வரலாறுகளில், சரித்திரங்களில், கதை காவியங்களில் இடம் பெற்ற மூலிகைகள் யாவும் மிகுந்த மருத்துவ பயன் உடையது என்பதை வாசகர்கள் அறிய வேண்டும். 




தும்பையும் தேவலோக கன்னியாம். இவள் விதிவசப் பயனால் சபிக்கப்பட்டு பூலோகம் வந்தவள். தாசி குலத்தில் பிறந்து சிவனடியார்களுக்கே தனது உடலை அர்ப்பணம் செய்து பணிவிடைகள் செய்வது என உறுதி பூண்டாள். 








அதன்படியே செய்துவரும் போது சிவபெருமானே சோதனை செய்ய எண்ணியவர், சிவனடியார் வேடம் பூண்டு தும்பை இல்லம் வந்து தங்கினார். இவர் சரசலீலைகள் செய்யாமல் நோய் வாய்பட்டவர் போல் நடித்து வாந்தி பேதி இப்படியாக ஒரே ரகளை. தும்பை இதை வெறுக்கவில்லை ஏனெனில் இவர் சிவனடியார் ஆயிற்றே. தும்பைக்கு இரவெல்லாம் மல ஜலத்தை சுத்தம் செய்வதே பணியாகியது. பொழுது புலரும் தருணம் சிவனடியாருக்கு ஆவிபிரிந்து விட்டது (மரணம் அடைந்தது போல் சிவபெருமான் நாடகம் அரங்கேற்றினார்) 

என்ன செய்வாள் பாவம் இறுதி கடன் முடிக்க ஊராரைக்கூட்டி மயானத்திற்கு கொண்டுபோய் சவ அடக்கம் செய்வதற்க்கு முன் இரவு சிவனடியார் கொடுத்த பணத்தை காட்டி "ஐயோ அன்போடு வந்த இவருடைய இச்சையை பூர்த்தி செய்யாத பாவியானேன்" என்று கதறி அழுதாளாம். தும்பையின் பக்தியை மெச்சிய சிவபெருமான் காட்சிதருகிறார்.



    
சிவபெருமான் காட்சி தந்தபோது பலவிதமாக புளங்காகிதம் அடைந்து கண்ணீர் பெறுக அழுகிறாள். இந்த பாவிக்கும் நீ கருணை புரிந்தாயா என்று. சிவபெருமானும் தும்பையின் பக்தியில் உருகி "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தும்பை என்கிறார்"  சிவபெருமான் இவ்வாறு கேட்டவுடன் மகிழ்ச்சியில் திகைத்துப்போன தும்பை "எனது பாதம் உமது சிரசில் என்றும் இருக்க வேண்டும்" என்று வாய்விட்டு குழறி கேட்டு விட்டால். அவள் மனதில் உங்கள் பாதம் என்றும் எனது சிரசில் இருக்க வேண்டும் என நினைத்தவள் தான் வாய்குழறி கேட்டதை நினைத்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டால். அடியவர்களுக்கு என்றும் எதையும் மறுக்காத சிவபெருமான் மன்னிப்பு கேட்ட தும்பையை பார்த்து "பெண்ணே நீ வாயாக கேட்ட வரம் தான் சரியானது எனது அடியவர்க்கெல்லாம் தொண்டு செய்த உமது பெருமையே பெருமை" என கூறி தும்பை செடியாக்கி அதன் கால் பாதம் போன்ற வடிவம் உள்ள மலரை என்றும் தனது சிரசில் வைத்து கொண்டாராம்.   




     

பிரதி வருஷமும் காஞ்சிபுரம் ஏகாம்பர ஈஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடக்கும் போது இந்த தும்பை மலரை ஏராளமாக காணலாம். கூடை கூடையாக வெளீர் என்ற வெண்மை நிறத்தில் இம்மலர்கள் ஏகாம்பர நாதரின் மேலே காணும் போது  நமக்கு தேவலோகத்தில் இருப்பது போன்ற உணர்வையே உண்டாக்கும். தும்பை செடிக்கு சித்த நூல்களில் வைகுண்டம் என்ற பரிபாஷையும் உண்டு. 


     
ஆயுர்வேத வைத்தியத்தில் தும்பைக்கு "துரோணி புஷ்பி" என்று பெயர். இம்முறைப்படி தும்பையை கல்லீரல், மண்ணீரல் வீக்கங்கள், காமாலை, இருமல், சீதபேதிகளுக்கும், விஷப்பூச்சி பாம்பு கடிகளுக்கும் உபயோகப் படுத்துவார்கள். டாக்டர் ஆர்.என்.சோப்ரா அவர்கள், தும்பையை எல்லாவித விஷப்பூச்சிகளுக்கும் சர்மரோகம் சீதள சம்பந்தமான நோய்களுக்கும் மிகச்சிறந்த மருந்து என கூறுகிறார்.

ஹோமியோபதியில் இதற்கு துரோன் அல்லது லூகாஸ் ஆஸ்பிரா என்று பெயர். பொதுவாக எல்லாவித விஷக்கடிகளுக்கும் தாய் திரவத்தில் 10 முதல் 15 துளி வரை உள்ளுக்குக் கொடுத்து மேலுக்கு கடிவாயில் தடவி வர குணம் கண்டுள்ளது .

சிவபெருமான் அணிந்துள்ள புலித்தோல், நாகங்கள், மண்டைஓடு, சுடுகாட்டுச் சாம்பல், ஆலகால விஷம், பிறைச்சந்திரன், கங்கை, ஊமத்தை, அருகு, தும்பை மலர் ஆகிய ஒவ்வொன்றும் புராண மகிமை வாய்ந்த ஆபரணங்களாகவே திகழ்கின்றன என்பதும் கவனிக்க வேண்டியவையே. 

இதுவரை தும்பையை பற்றி பார்த்தது மூலிகை மன்னர் கண்ணப்பர் அவர்களின் கட்டுரையாகும். நடுவே ஒரு சில இடைச்செருகல்களை சேர்த்துள்ளேன். அடுத்து வைத்திய ஜாம்பவானாக ஜட்ஜ் பலராமய்யாவின் பதிவுகளில் இருந்து......


                 



          

     
இங்கு தும்பையை பயன்படுத்தும்போது கண்டிப்பாக புளி,எலுமிச்சை, உப்பு நீக்கி உணவு உண்ண வேண்டும் என்று பலராமய்யா தெறிவித்திருப்பது மிகவும் உண்மை இது கண்ணப்பர் பதிவில் காணவில்லை. பாம்பு பூச்சி விசகடி, தோல் நோய்கள் என்ற முக்கியமான காலத்தில் இந்த பத்தியதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.       

சிறிய வயதில் இதன் பூக்களை பறித்து அதை திருப்பி அழுத்தினாள் அதன் பின்புற காம்பில் இருந்து தேன் வரும் அதை சுவைப்பதும் அந்த பூவை காதில் மூக்கில் மூக்குத்தி போன்றும் காதணி போன்றும் வைத்து விளையாடியது இன்றளவும் மனதில் பசுமையான நினைவாய் உள்ளது.     




தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவற்கும் இறைவா போற்றி போற்றி 


பூக்கள் தொடர்ந்து பூக்கும் 
நன்றி வணக்கம் 





Wednesday, 6 February 2019

தேனின் இனிமை


தேனின் இனிமை 


HONEY


தேன் என்றாலே குழந்தை முதல் பெரியவர்கள்வரை சுவைக்காகவும் உடல் நலத்திற்காகவும் விரும்பி எடுக்கும் உணவு இது மனிதர்கள் மட்டும் இன்றி கரடி, எறும்பு என  பலதரப்பட்ட உயிரினங்களுக்கும் பிடித்த உணவு. இதன் சுவை பயன் என பல பதிவுகளிலும், புத்தகங்களிலும், செவிவழி செய்தியாகவும் அறிந்திருப்பீர்கள். இன்று இந்த பதிவில் அதையும் தாண்டி தேனை பற்றிய முழு விவரங்களும் இங்கு உள்ளது என்பதற்கு நான் GUARANTEE.     



சித்த ஆயுர்வேத யுனானி சாத்திரங்களில் இருந்தும் புதிய விஷயங்களையும் சேர்த்து பதிவிடுகிறேன்.



தேனில் புதிய தேன், பழைய தேன் என இருவகையில் எடுத்துக்கொண்டால் புதிய தேன் உடலுக்கு குளிர்ச்சி ஆரோக்கியமும், பழைய தேன் உடலுக்கு சூடும் நோய்நீக்கமும் செய்யும். இதை சாத்திர உதாரணத்தை பார்க்கலாம்.

அகத்தியர் 
" புதுத்தேன் பருப்பிக்கும் பூண்டிடுமெய் தானே 
மதுத்தான் பழையதுகேள் மானே கதித்த 
உடல் மெலியு முள்நிணமு மோடியுருகுங் காண் 
திடமுடனே தீயெனவே செப்பு "    

புதுத்தேன் மேல்படத்தில் காட்டிய நிறத்திலும், பழைய தேன் கருப்பு நிறமும் கொண்டிருக்கும் (வருட கணக்கில் சென்றது). புதுத்தேன் அதிகமாக உட்கொண்டாலும் எந்த தீங்கும் செய்யாது. ஆனால் பழைய தேன் TWO TABLE SPOON அளவு உட்கொண்டாலே உடலில் சூடும் வயிற்றுப்போக்கும் உண்டு பண்ணும். எனவே உடல் எடை குறைய பழைய தேனையே பயன்படுத்த வேண்டும் (PROGRESSIVELY INCREASE THE QUANTITY). புதிய தேன் உடலை பருக்கச்செய்யும்.     



ஒருசில பழைய தேனில் கற்கண்டு உண்டாகும் அதை பற்றி இறுதியில் பார்ப்போம். சித்தர்கள் சொன்னபடி தேன் சுத்தமான உணவு என்றாலும் அதையும் சுத்தி (PURIFICATION) செய்துதான் உணவில் சேர்க்கவேண்டும். அதை பற்றியும் இறுதியில் காண்போம். தேன் பொதுவாக பலவகை படும் அவை .....  




மலைத்தேன் 
"ஐயிரும லீளை விக்க லக்கிப்புண் வெப்புடல் நோய் 
பைய வொழியும் பசியுமுறும் வையகத்தி 
லெண்ணுமிசை யாமருந்திற் கேற்ற வனுபான 
நண்ணுமலைத் தேனொன்றி னால் "

பொருள் : மலைத்தேன் கபம். ஈளை, விக்கல், அக்கிப்புண், உடல்வெப்பம் நீங்கும் பசிஉண்டாகும். சித்த மருந்துகளுக்கு   அனுபானம் (MEDICINE CARRIER) ஆகும்.       

கொம்புத்தேன் 
" வாத பித்த வையத்தை மாற்றுமுளை மாந்தைதனைக் 
காதமென வோடக் கடியுங்காண் பூதரமாம் 
வம்புமுலை மாதே வருமருசி நீக்கிவிடுங்
கொம்புத்தே னன்றாகுங் கூறு "

பொருள் : வாதநோய், பித்தம், கபம், உட்புண் (தொண்டை,வயிறு), உணவில் ருசியின்மை போன்றவை விலகும்.     

மரப்பொந்துத்தேன் 
" பசிவெப்பாம் வாந்திமந்தம் பல்விக்கல் வெய்ய 
ருசிமுக்க பந்தூல ரோகங் கசிவகலாக 
கொந்துத்தேன் பாடுங் குழலணங்கே காவின்மரப் 
பொந்துத்தே னுண்டாயிற் போம் " 

பொருள் : பசி வெப்பம் வெப்பம் உண்டாகும், வாந்தி, சோர்வு, விக்கல், ருசியின்மை, தூலநோய் (உடல் பருமன்) போன்றவை விலகும்.  


புற்றுத்தேன் 
"கொப்பணியு மாதே குவலயத்து ளெல்லார்க்கு 
மொப்பநின்ற வைய மொளிக்குங்காண் கொப்புளிக்குங் 
காசசுவா சம்வாந்தி கண்ணிலெழு நோய்களறும் 
வீசுபுற்றுத் தேனுக்கு மெய் "

பொருள் : கபம், காசநோய், சுவாச பிரச்சனை,வாந்தி, கண்பார்வை கோளாறுகள் இவைகள் குணமாகும்.    


மனைத்தேன் 
" புண்ணும் புரையும்போம் போகாக் கரப்பனறு 
மெண்ணரிய தீபனமா மேந்திழையே கண்ணுகளிற் 
பூச்சிபுழு வெட்டுகபம் பொல்லா விருமலறும்  
பேச்சின்மனைத் தேனுக்குப் பேசு "

பொருள் : வீட்டில் கட்டும் தேன் கூடுகளில் கிடைக்கும் தேன் புண், அரிக்கும் குழிப்புண், கரப்பான் வகைப்புண், கண்ணில் ஏற்படும் விரணம், கண்ணில் புழு, கபம் போன்ற பிணிகள் நீங்கும்.      



புதியதேன் 
" ஆயுளுட னுட்டிணம ரோசி யகக்கபமு 
மேய வழகும் வளர்ந்திடுங்காண் தூய 
மதிய மெனுவதன மதரசே நாளும் 
புதிய நறுந்தேனாற் புகழ் "

பொருள் : புதுதேனால் ஆயுளும் கூடும், உஷ்ணம் நீங்கும், அழகு கூடும்,  கபம் உண்டாகும்.  

பழையதேன் 
"வாதப் பெருக்கை வயிற்றெரிவைத் தத்துறையைச்  
சேதப் படுத்து இன்னுஞ் செப்பவோ மாதரசே  
சத்திப் புறுமரசந் தன்னைத் தூண்டும் புளிப்புத் 
தித்திப் புறும்பழைய தேன்    "

பொருள் : இனிப்பும் புளிப்பும் கலந்த பழைய தேன் வாதநோயை உண்டாக்கும், வயறுஎறிச்சல் உண்டு பண்ணும், மூல நோயை உண்டாகும் காரணம் இது உடலில் சூட்டை ஏற்படுத்தும் குணம் கொண்டது. நிணத்தை (கொழுப்பை) கரைக்கும்.   





சித்தர்கள் தேனை அதிக அளவில் அனுபானமாக பயன்படுத்துகின்றனர். தனியாகவும் உணவிலும் சேர்க்கலாம். அதற்கான பல உதாரண பாடல்கள் உள்ளன. அதை இங்கு சேர்க்கவில்லை.  



தேனும் நீரும்  

தேரையர் 
"பயப்படு பிரசமுன் பழகுமைச் சுரம் 
பயப்படு மாறென"

தண்ணீரும் தேனும் கலந்து உட்கொள்ள பழைய (நீண்டநாள்) சுரம் நீங்கும்.



அகத்தியர் 
" காண் பிரசம் புட்பாதங் காரமது மாட்சிகமும் 
தேன் பெயரா நற்குணமோ தித்திப்பாம் ஊன்கொள் 
அதிசார மைமேக மாக்கு நோய் புண்காண
பதிசாரப் போமே பயந்து "

பொருள் : தேனுக்கு பிரசம், புட்பாதம், மது, மாட்சிகம் என பல பெயர்கள் உண்டு. இது உடலை தேற்றும், வயிற்றுபோக்கு, மேகம் (வெள்ளை படுத்தல்), புண்கள் இவைகளை குணமாக்கும்.    



"வாதமோ கபமே கக்கன் மகோதரங் குன்மம் புண்ணோய் 
ஏதமார் கண்ணோய் வாந்தி யீழையே கோழை யோடு 
வாதையார் நெஞ்செரிப்பு மந்தமே குக்கன் மாற்றும் 
ஓதிடு மலமுங் கட்டு மூவகையார் தேன் தான் மாதோ "

பொருள் :வாதநோய், கபம், கக்கிருமல், பெருவயிறு, வயற்றில் வாயு பிரச்சனை, புண்கள், கண்நோய், வாந்தி, கபம், கோழை, நெஞ்சுஎறிவு, சோர்வு, வயிற்றுபோக்கு இவைகள் குணமாகும்.          



ஆயுர்வேதத்தில் தேன் (ஆயுர்வேத சங்கிரகங்களில்)

எல்லா வகையான தேனும் சற்று வாதத்தை வளர்க்கும். குருகுணம் உள்ளது. குளிர்ச்சியானது. ரத்தபித்தம் (உடலில் இருந்து ஏதேனும் ஒரு முறையில் ரத்தம் தானாக வெளிவருதல்) யை குணமாக்கும். பித்தம் கபம் இவைகளை குணமாக்கும்.

தேன் உடலில் பிளந்த பொருளைச் சேர்க்கும்(எலும்பு தசை நார்), இறுகிப்போன தோஷங்களை பிளக்கும் (கபம்).  

தேனை சூடாக்க கூடாது. அடுப்பில் வைத்து சூடாக்கப்பட்ட தேனை பயன்படுத்துபவன் மரணமடைவான் (சரக ஸம்ஹிதை). சூடாக்கப்பட்ட தேன் விஷமாகும். இதே போல் வனிக்கொடி விதை (VANILLA - ICE CREAM FLAVOR), இசப்கோல் விதையும் சூடாக்கினால் இவை விஷமாக மாறிவிடும் (சில்விஷம்).

தேனை சேகரிக்கும் பூச்சி பல நல்ல மலர்களில் தேனை சேகரிப்பது போன்று விஷப்பூக்களிலும் தேனை சேகரிக்கும் எனவே தேனை தூய்மை படுத்தி உட்கொள்ள வேண்டும்.         

அயர்வேதத்தில் இன்னும் தேனை பற்றி உண்மைகளை ஆராய்ந்தால் நீளும், எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்.  



யுனானியில் தேன் (முகமதியர் மருத்துவம்) 
முகமது ஸல் (நபிகள் நாயகம்) அவர்கள் தேனை பற்றி குறிப்பிட்ட அனைத்தையும் எழுத காலம் இல்லை, எனவே சில குறிப்புகள் மட்டும் 

  • எந்த நோயும் எளிதில் ஏற்படாது 
  • வயோதிகம் மறைய 
  • பலஹீனம் இல்லாமல் இருக்க 
  • உடல் இளைக்க அல்லது பருக்க 
  • வறட்டு இருமல் நிற்க 
  • தொண்டை கட்டு குணமாக 
  • இளமையுடன் இருக்க 
  • அதிக ஆண்டுகள் வாழ  
  • புண் புரை ஆற 
  • தாகம் தீர 
  • ஏப்பம் விக்கல் நிற்க 
  • அவலட்சண உடல் அழகாக 
  • குழந்தைகளின் நோய்கள் நீங்க என அடுக்கிக்கொண்டு செல்லலாம் 


தேனில் உண்டாகும் கற்கண்டு 
" தேனீற் பிறந்த செழுங்கண்டாற் கண்விழிக்கு 
ளூனிற் படர்படல மோடிடுங்காண் கானகத்திற் 
காகுஞ் சுரமாகு மண்டும் பசிகபங்கா 
லேகுஞ் சுரமேகு மெண் "

பொருள் : கண்ணில் தோன்றும் படலம், சுரம் நீங்கும். பசி அதிகரிக்கும்.   

"தேனுறு கற்கண் டிற்கே திகழ்சுவை கஷாய ஸ்வாது 
உனமில் சீதம் ரூக்ஷ முறுமது ரவிபா கம்மே 
ஈனமாம் வாந்தி விக்க லிருஜ்சுர ரக்த தோஷம் 
பீனமார் கபஞ்சு வாசம் ரணமதி ஸாரம் பித்தம் "
பொருள் : இது மதுர சுவை உடையது, குளிர்ச்சியானது, வாந்தி, விக்கல், சுரம், ரக்த தோஷம், கபம், ரணம், வயிற்றுப்போக்கு, பித்தம் இவைகளை நீக்கும்.

        


தேன்மெழுகு 
தேன்கூடை (தேனடையை) சுத்தம் செய்த பின் அதை அடுப்பில் வைத்து உருக்கி அதில் உள்ள மெழுகை (WAX) பிரித்தெடுத்து பயன்படுத்தலாம். இது பொதுவாக சித்த வைத்தியங்களில் வெளிப்புற மருந்துகளில் (EXTERNAL OINTMENTS) ஆக  பயன்படுத்தப்படுகிறது. இது பற்றி பலசெய்திகள் உண்டு இங்கு இதை அலசவில்லை. இங்கு தேனை மட்டுமே விரிவாக காட்டியுள்ளேன்.   









தேனை தூய்மை செய்யும் முறை 

தேனடையில் சேகரித்த தேனை ஒரு துணியில் வடிகட்டி அதில் உள்ள பூச்சிகள் குப்பைகள் இருப்பதை நீக்க வேண்டும். இப்பொது தேன் தெளிவாக இருக்கும். இதை ஒரு வாயகன்ற சில்வர் பாத்திரத்தில் ஊற்றி (ஒரு லிட்டர்க்கு)  15 மிளகுகள் அதில் போட்டு அந்த பாத்திரத்தின் வாய்பகுதியை ஒரு துணியால் சுற்றி கட்டிவைக்க வேண்டும். பின் காலை முதல் மாலை வரை இதை வெயிலில் வைக்க வேண்டும். இவ்வாறு தேனை 10 நாட்கள் தொடர்ந்து வெயிலில் வைக்க வேண்டும்.
தேன் இளஞ்சூடாகும் விஷமாகாது இதில் உள்ள நீர் வற்றி தேவை இல்லாத விஷப்பொருட்கள் யாவும் அழிந்து தேன் சற்று பாகு போன்று இறுக்கம் அடையும். இப்போது தேனை மீண்டும் வடிகட்டி அதில் உள்ள மிளகை அகற்றி ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளலாம். இதுவே உண்மையான சித்தர்கள் சொன்ன தேன் சுத்தி முறை. இந்த தேன் உடலுக்கு நன்மை தவிர வேறு எதுவும் செய்யாது. இதை மருந்துகளுக்கு அனுபானமாக பயன்படுத்தினால் விரைவாக நோய் நீங்கும். 

இதில் சொல்லப்பட்ட எந்த கருத்தும் என் சொந்த கருத்து அல்ல, இவை அனைத்தும் நம் பாரம்பரிய மருத்துவர்களான சித்தர்களின் கருத்து. அதனால் தான் தேனை பற்றி எழுதும் ஒவ்வொரு இடங்களிலும் சித்தர்கள் சொன்ன பாட்டையும் (MANUSCRIPTS POEMS) அதற்கான விளக்கத்தையும் போதுமான அளவு தவறு இல்லாமல் கொடுத்துள்ளேன். இந்த காலத்திற்க்கு ஏற்றாற்போல் படங்களுடன் விளக்கமும் தெறிந்தவரை எழுதியுள்ளேன். இதில் தவறோ அல்லது சந்தகமோ இருந்தால் COMMENT இல் தெரிவியுங்கள்.

THIS ARTICLE BELONGS TO SIDDHARS
   
அனைவரும் பயன்படுத்தி நலமுடன் வாழ்க........

வாழ்க தமிழ் .....  வாழ்க தமிழர் 

ஓம் சரஹணபவ குக 
நன்றி வணக்கம் 
தொடரும் 


(IN LOT OF REFERENCES SAID THE EUROPEAN PEOPLES ARE USED A HUGE QUANTITY OF HONEY IN EVERY YEAR )





ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...